உலகைப் படைத்த ஆண்டவனே
வாழும் மக்களையும் படைத்தாரே!
மக்களைப் படைத்த ஆண்டவனே
பேசும்மொழி அறிவையும் ஊட்டினாரே!
அந்தப் பேசும்மொழி தான் - நாம்
நமக்குள்ளே உறவாட ஊடகமாச்சே!
அந்த மொழி எந்த மொழி - அதுவே
மொழிகளுக்குள் மூத்த மொழியாம்!
பிறந்த குழந்தையும் வெளிப்படுத்தும்
உணர்வுகளால் உருவான மொழியாம்!
அன்புடன் அம்மாவும் அணைத்து
பாலுடன் கலந்தூட்டிய மொழியாம்!
அப்பாவும் கையில் ஏந்தியே
அன்புகாட்டிய அந்த மொழியே
எங்கள் தாய் மொழியாம் தமிழே!
நீங்கள் ஏற்பீரோ இல்லையோ - எவரும்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று
புறப்பொருள் வெண்பாமாலை சுட்டிய
அடிகளை அடிக்கடி படிப்பவரே!
அப்படியும் நம்பாவிட்டால் கேளும்
அகத்தியரை ஆக்கி அவருக்கே தமிழூட்டி
அகத்தியராலே மக்களும் தமிழைக் கற்றிட
முதற் கடவுள் சிவனார் முயன்றாரே!
தமிழ்க் கடவுள் முருகன் சொல்லி
அகத்தியர் ஆக்கிய தமிழ் இலக்கணமே
அகத்தியம் என்னும் முதல் நூலே!
அகத்தியம் பற்றி அறியாவிட்டாலும்
பிறமொழிக் கலப்பின்றிய இலக்கியமாய்
எழுத்து, சொல்லு, பொருளென மூவகை
இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டே!
தொல்காப்பியருக்குப் பின்னே வந்த
பவணந்தியார் தானாக்கிய நன்நூலில்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே" என
வடமொழியைக் கொஞ்சம் பொறுக்கி
தமிழுக்குள் நுழைத்துக் கலக்கினாரே!
வணிகநோக்கிலும் புலம்பெயர்விலும்
உலகெங்கும் உலாவும் நம்மாளுங்க
ஆங்காங்கே படித்ததும் கேட்டதுமாய்
ஐயைந்து (5x5) மொழிக்கு மேலான
சொல்களைப் பொறுக்கி எடுத்தே
எங்கள் தாய் மொழியாம்
தமிழுக்கு உள்ளே நுழைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் கலக்கிறாங்க!
பிறமொழிக் கலப்பு இன்றிய
அன்றைய தமிழும் காலமாக
காலம் காலமாய்க் கலந்து
நுழைந்த மொழிகளால் தான்
இன்றைய தமிழும் தமிழின்றி
அடையாளம் இழந்து விட்டதே!
தமிழே தமிழாக இல்லாத
இன்றைய இழிமொழியை விரட்ட
பிறமொழிகளைத் தூக்கி எறி
பண்டைத் தமிழர் பேசிய
தொன்மைத் தமிழைக் கண்டுபிடி
நற்றமிழ் நம்மாளுங்க நாவாலே
வெளிப்படும் நாள் எந்நாளோ - அந்நாளே
எம் தமிழுக்குப் பிறந்த நாள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon